market passion

Monday, January 28, 2008

ஸ்டோரி டிஸ்கஷன்

தயாரிப்பாளர் துரைசிங்கம் தன் திரைப்பட நண்பர்களுடன் சோகமாக பேசிகொண்டிருந்தார்.

" என்னாய்யா இது, நம்ம நெலம இப்புடி ஆயிடுச்சு!!! வன்முறையும் ஆபாசமும் சினிமாவில் இருக்கக்கூடாதுன்னு இப்புடி போராட்டம் நடத்தறாங்க.மொத்தம் 15 ரீலிலே இது ரெண்டையும் எடுத்துட்டா 14 ரீல் போயிடுமே.பாக்கி ஒரு ரீல வச்சு பயாஸ்கோப்புதான் ஓட்டணும்"

அந்த சமயத்தில் ஒருவர் உள்ளே வருகிறார். " சார், என் பெயர் கதையரசர் கபிலன்.
எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தா, வெள்ளி விழா கொண்டாடற மாதிரி ஒரு கதை பண்ணி தரேன் சார்"

டைரக்டர்: அதென்ன கதையரசர் கபிலன். உங்க அம்மா அப்பா வச்ச பேரா?

க.கபிலன்: இல்ல சார். கபிலன் அவங்க வச்ச பேர். பட்டம் நானா சேத்துகிட்டேன்.
சார் கதை சொல்லட்டுங்களா?

தயாரிப்பாளர்: கதை யாருக்குயா வேணும்? இவ்வளவு நாளா கதையை வச்சா படம் எடுத்தோம்.

க.கபிலன்: சார் கதைன்ன நிஜமா கதை கிடையாது, கதை மாதிரி.

டைரக்டர்(தயாரிப்பளரிடம்) சார், நம்பளுக்கோ இப்ப வேலை எதுவும் இல்லை. சும்மா கேட்டுதான் பாப்போமே.

தயாரிப்பாளர்: சரி சொல்லுய்யா, என்ன கிராமத்து கதையா?

க.கபிலன்: இல்ல சார், கிராமத்து கதைன்னா அதுல கெட்ட வார்த்தையெல்லாம் வரும் அப்புறம் சென்சார் பிராப்ளம். நம்ப கதை நகரத்துல நடக்கறா மாதிரி வச்சுப்போம்

டைரக்டர்: சரிய்யா அப்படியே வச்சுக்க, கதைய சொல்லு.

க.கபிலன்: நம்ம ஹீரோ படிக்காதவன். ஏழை. தெருத்தெருவா பேப்பர் பொருக்கறதுதான் அவன் வேலை.

டைரக்டர்: ஆஹா இந்த மாதிரி காரக்டர் இது வரைக்கும் எந்த படத்திலும் வந்ததில்லை, புதுமையா இருக்கு மேலே சொல்லு.

க.கபிலன்: ஹீரோயின் ஒரு கலெக்டர். ஒரு நாள் அவங்க ஆபீஸ் வாசல்ல ஹீரோ பேப்பர் பொருக்கிகிட்டிருக்கும் போது, கலெக்டர் கிட்ட ஒரு மந்திரி ஒரு பைல்ல கையெழுத்து போட சொல்லி மிரட்டறார். இருவருக்கும் தகராறு வர அந்த சத்தத்தை கேட்டு ஹீரோ அந்த ஆபீஸ் இருக்கும் நாலாவது மாடிக்கு ஜம்ப் பண்ணறான். இதுதான் ஹீரோ ஹீரோயின் சந்திக்கும் முதல் காட்சி. அந்த இடத்துல நம்ம அவர்களுடைய கண், காது, மூக்கு, கால் நகம் இவற்றை மாத்தி மாத்தி காட்டறோம். அப்ப ஹீரோ பொருக்கின குப்பையும், கலெக்டர் ஆபீஸ் குப்பையும் ஒண்ணா கலக்குது.

டைரக்டர்: இங்க ஒரு பாட்டு வச்சுக்கலாம். backgroundல கலர் கலரா பேப்பர் பறக்க விடலாம்.

தயாரிப்பாளர்: ஆனா குப்பை பொருக்கறவனும் கலெக்டரும் எப்பிடியா சேருவாங்க? லாஜிக்கா இல்லையே?

க.கபிலன்:அதுக்கு ஒரு ஐடியா வச்சுருக்கேன். நம்ம ஹீரோ சொல்றான்"ஊர்ல ஒரு குப்பை இருக்க கூடாது, அதுதான் என் லட்சியம், அப்பறம்தான் நம்ம கல்யாணம்னு". அதுக்கு ஹீரோயினும் "இந்த மந்திரி தொல்லை தாங்கல்லை, அதுனால நானும் வேலைய ராஜினாமா பண்ணிட்டு உங்க லட்சியத்தை நிறைவேத்துவேன்னு சபதம் போடறா.இந்த இடத்துல அவங்க ஆபீஸ்ல கடிகாரம் மணி அடிக்குது, சாமி படத்துலேந்து ஒரு பூ விழுது. ஒரு பொம்மை தலை ஆட்டுது.ஒரு காலண்டர் காத்துல திரும்பிக்குது.

டைரக்டர்:ஆஹா சூப்பர், அப்புறம்!

க.கபிலன்: ஹீரோயின் ஹீரோவுக்கு அவன் பொருக்கும் பேப்பரில் இருந்தே உலக அறிவும்,படிப்பறிவும் சொல்லி தராங்க.இப்பிடியே படிச்சு ஒரு வருஷத்துல ஹீரோ ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுதி பாஸ் பண்ணிடறார்.

தயாரிப்பாளர்: யோவ், இது உனக்கே கொஞ்ஜம் ஓவரா தெரியல்லை, சரி மேலே சொல்லு.

க.கபிலன்: ஒரு நாள் ஹீரோ ஹீரோயின் வீட்டுக்கு போறார். அங்கே ஹீரோயின் ஒரு பாட்டை கேட்க அவருக்கு அதிர்ச்சி.அந்த பாட்ட எங்கயோ கேட்ட ஞாபகம்.அப்பறம்தான் அவருக்கு ஞாபகம் வருது அது அவர் தாயின் கருவில் உருவானபோது, அவர் அம்மா பாடிய பாட்டு.அதனால் தன் தாயின் மரணத்திற்கும் ஹீரோயின் அப்பாவுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக சந்தேகப்படுகிறான். இந்த உண்மை தெரிந்த பிறகே நம் திருமணம் என கூறி வெளியேருகிறான்.

தயாரிப்பாளர்: ஆஹா அம்மா சென்டிமெண்ட் அருமைய்யா, பின்னிட்ட போ!

க.கபிலன்: இங்கே இடைவேளை வச்சுக்கலாம் சார்.

தயாரிப்பாளர்: சரிய்யா, இன்னிக்கு இது போதும், மீதிய நாளைக்கு வந்து சொல்லு.

Labels: , , ,

1 Comments:

  • At 1:25 AM, Blogger Geetha Sambasivam said…

    இன்னும் படிக்கவே இல்லை,படிச்சுட்டுப் பின்னூட்டம் எழுதறேன். அது சரி, இப்போ எங்கே போனாலும் McAfee Security தானா? எனக்கு இணையம் கொஞ்சம் தகராறு செய்யுதே?

     

Post a Comment

<< Home